Wednesday 26 January 2011

* டயலொக் தொலைக்காட்சியில் சேவையில் இணையும் 3 தமிழ் அலைவரிசைகள்

தமிழ்பேசும் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு டயலொக் அக்சிஆட்டா நிறுவனம் தனது டயலொக் தொலைக்காட்சி அலைவரிசைகளின் தொகுப்பில் சன் தொலைக்காட்சி சேவையின் தமிழ் அலைவரிசைகளை புதிய இணைத்துள்ளது.

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகளான சன் டி.வி., சன் மியுசிக் மற்றும் கே.டி.வி. ஆகிய அலைவரிகைளே டயலொக் தொலைக்காட்சியின் அலைவரிசைப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

டயலொக் டி.வி.யின் அதிகூடிய கட்டணப் பொதியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இத்தமிழ் அலைவரிசைகளும் இலவசமாக வழங்கப்படும். அதேநேரம், பிரத்தியேகமாக தமிழ் அலைவரிசைகளுக்கென தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தீ என்ற பொதியை தெரிவு செய்வதன் மூலம், புதிய அலைவரிசைகள் உட்பட டயலொக் டி.வி.யிலுள்ள அனைத்து தமிழ் அலைவரிசைகளையும் பார்த்து மகிழ முடியும் என்று டயலொக் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியும் டயலொக் தொலைக்காட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நுஷாட் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நுஷாட் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி என்பது மக்களுக்கு பல்சுவை அம்சங்களை வழங்குவது. எனவேதான் செய்திகள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, களிப்பூட்டல் என பல்வேறு வகையான அலைவரிசைகளை எமது பக்கேஜில் இணைத்துக் கொண்டுள்ளோம்.

டயலொக் டி.வி.யின் செயற்பாடுகளை நாம் ஆரம்பித்தபோது அது 28 அலைவரிசைகளைக் கொண்டிருந்தது. இப்போது அலைவரிசைகளின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் 15 ஆயிரம் பாவனையாளர்களைக் கொண்டிருந்த டயலொக் டி.வி. இன்று 1இலட்சத்து 50ஆயிரம் பாவனையாளர்களை தம்வசப்படுத்தியுள்ளது.

தமிழ் பேசும் சமுகங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகைகளிலும் வெளிநாட்டு தமிழ் அலைவரிசைகளை பார்க்கின்றனர். பொதுவாக தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் இலங்கையிலுள்ள தமிழ்,முஸ்லிம் நேயர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமான அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வீட்டிலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்பதை எமது சந்தை ஆய்வுகளிலிருந்து தெரிந்து கொண்டோம். அதனடிப்படையிலேயே சன் குழுமத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டோம்.

ஏற்கனவே டயலொக் தொலைக்காட்சியின் 1949 ரூபா என்ற கட்டணப் பொதியை பாவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மூன்று அலைவரிசைகளும் இலவசமாக வழங்கப்படும். வேறொரு பக்கேஜை பாவிக்கின்ற வாடிக்கையாளர் 729 ரூபாவை மேலதிமாக செலுத்தி இம்மூன்று அலைவரிசைகளையும் இணைத்துக் கொள்ள முடியும்.

இது தவிர தற்போது தீ என்ற புதிய பக்கேஜ் ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றோம். அதனை தெரிவு செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட 3 புதிய அலைவரிசைகளையும் ஏற்கனவே உள்ள கலைஞர், தொலைக்காட்சி, ஸ்டார் விஜய் போன்றவற்றையும் அத்துடன் உள்நாட்டு அலைவரிசைகளையும் பார்த்து மகிழலாம். இந்த பக்கேஜிற்கான கட்டணம் 729 ரூபாவாகும்.

செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை டயலொக் டி.வி, கொண்டுள்ளது. நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கின்ற எவரும் இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

சன் டி.வி.யுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு இப்போது சிறந்த அலைவரிசைத் தெரிவுகளை வழங்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதன்படி எதிர்காலத்திலும் புதியபுதிய அலைவரிசைகளை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முன்னர் சீ.பி.என். இஸட் நிறுவனத்திற்கு சொந்தமாகவிருந்த சொத்துக்களை கையகப்படுத்தியதன் டயலொக் குழுமம், செய்மதியூடான தொலைக்காட்சி சேவைத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தது. இதன் மூலம் இலங்கையின் செய்மதித் தொøல்ககாட்சி சேவைத்துறையில் புரட்சியொன்றை ஏற்படுத்திய டயலொக் டி.வி.யை இப்போது நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் தனது சேவையை விஸ்தரித்துள்ளது.

நன்றி:- வீரகேசரி இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/01/3.html"

Sunday 23 January 2011

* 5 பில்லியன் அமெ. டொலர்களை இலக்கு வைக்கும் இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறை

இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையின் மூலம் 2015 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டும் நோக்கில் புதிய துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆடைக் கைத்தொழில் துறை தி;ட்டமிட்டுள்ளது.

"இலங்கையின் ஆடைக் கைத்தொழில் உலகத் தரம்மிக்கதான தயாரிப்புகளை சர்வதேச முத்திரையுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது எப்பொழுதும் தொழில்சார் விழுமிய நடைமுறைகளையும் சுற்றாடல் தராதரங்களையும் கடைப்பிடித்து வருகின்றது. இக் கைத்தொழிலானது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தருமளவு பெரியதொரு கைத்தொழிலாகும். இதற்கு மேலதிக வசதிகளை வழங்குவதற்காக உட்துறைமுக வர்த்தக ஈடுபாட்டு இறக்குமதிகள், பதனிடல் மற்றும் மீள் ஏற்றுமதிகள், கப்பலேற்றல் வியாபாரங்கள் என்பவற்றினை ஆடைக்கைத்தொழில் ஊக்குவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். உயர் பெறுமதி சேர்க்கப்பட்ட செயற்பாடுகளுடன் தொடர்பான புடவை, ஆடை மற்றும் தோற்பொருள் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புடவை, தோற்பொருள், பாதணிகள் மற்றும் பைகள் தயாரிப்புக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி தீர்வை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

முகாமைத்துவம், நிதி, வழங்கல் மற்றும் விலைப்பட்டியலிடல் செயற்பாடுகளுக்கான பிரதான கொள்வனவாளர்கள் தமது தலைமையகங்களை இலங்கையில் தாபிப்பதை கவர்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்தகைய செயற்பாடுகளின் வெளிநாட்டுச் செலவாணி வருமானத்தினை வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இச்செயன்முறைகளை ஊக்குவிக்கும் வகையில் செலாவணிக் கட்டுப்பாட்டுத் தேவைப்பாடுகள் மற்றும் சுங்க நடைமுறைகள் என்பன இலகுவாக்கப்படும்." என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் தெரிவித்திருந்தார்.

மேலும், மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி கொள்கைவரைவுத்திட்டத்துக்கு அமைவாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் "இலங்கை, ஆசியாவின் சொர்க்கபுரி" திட்டமும் ஆடைக் கைத்தொழில் துறை முன்னேற்றத்துக்கு வழிகோலியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய ஏற்றுமதி வருமானத்தில் 46 வீதமான 3262 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆடைக் கைத்தொழில் துறையின் மூலம் பெற்றுக் கொள்ள முடிந்ததாக தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் பெருமளவு பங்கை வகிப்பது ஆடைக் கைத்தொழில் துறை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உள்நாட்டு ஆடைக்கைத்தொழில் முயற்சியாளர்கள் புதிய தயாரிப்புகளை வடிவமைப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டிகரமான சூழ்நிலையை சமாளிக்க முடியுமென தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மேலும் மூன்று புதிய ஆடைக் கைத்தொழில் பிராந்தியங்கள் உருவாக்கப்படும். புதிய தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் புதிய உற்பத்திப் பொருகள் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் கூடிய அக்கறை செலுத்தப்படும்" என தேசிய கொள்கை வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துறையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் முக்கிய ஆடை தயாரிப்பாளராக தடம் பதித்துள்ளது.

ஜாஃப் (JAAF) அமைப்பின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், பாரம்பரிய வர்த்தக நடவடிக்கைகளை கைக்கொள்வதிலும், ஆடைக் கைத்தொழில் துறையில் முன்னணி ஈடுபாடுடையவர்கள் எனும் வயிலும், உலகின் முதற்தர சூழல் பாதுகாப்பான தொழிற்சாலைகளையும் கொண்டமைந்தமை போன்றன இந்த துறையின் வளர்ச்சியில் நாம் எந்தளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதற்கு சான்று பகர்கின்றன" என்றார் இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையானது சர்வதேச கொள்வனவாளர்களுக்கு பிரதான மூன்று அனுகூலங்களை வழங்குகிறது. முதலாவதாக, அதிவேகமான விநியோகம் அமைந்துள்ளது. இதற்கு; உலகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமைந்துள்ளது. உற்பத்தியிலிருந்து விநியோகம் வரை இலங்கை ஆடைக் கைத்தொழில்துறையானது நேரத்தை குறைப்பதற்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறது.

இரண்டாவது அனுகூலமாக, கேள்விக்கு ஏற்ப பாரிய கொள்ளளவுகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்வனவாளர்களுக்கு வழங்கக்கூடிய திறன் காணப்படுகிறது. கடந்த நான்கு தசாப்த காலமாக உலகத்தரம்மிக்க தயாரிப்புகளை கொள்வனவாளர்களுக்கு இலங்கை ஆடைக் கைத்தொழில் துறை வழங்கி வருகிறது.

மூன்றாவது அனுகூலமாக, இலங்கையில் காணப்படும் சாதகமான வர்த்தக கொள்கைகளும் முதலீட்டாளர் சூழ்நிலையுமாகும். தெற்காசியாவில் மிகவும் கட்டுப்பாடுகள் குறைந்த பொருளாதார நிலை காணப்படும் நாடாக இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் முதலீட்டு உறுதிப்படுத்தல் உடன்படிக்கைகள் போன்றன வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் கவரும் வகையில் அமைந்துள்ளன என ஜாஃப் (JAAF) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆடைக் கைத்தொழில் துறையின் முன்னேற்றம் குறித்து இவ்வாண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் 2015 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றுக் கொள்ள முடியுமென தாம் எதிர்பார்ப்பதாக ஜாஃப் (JAAF) அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.

நன்றி:- வீரகேசரி இணையம்
submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2011/01/5.html"