Friday 21 May 2010

* ATM தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் மரணம்

வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் முறையை மகா எளிமையாக்கியுள்ள ஏடிஎம் மெஷினைக் கண்டுபிடித்தவரான ஜான் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd-Barron) ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

இந்த ஷெப்பர்ட் தான் உலகின் முதலாவது ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் இவர் அங்குள்ள ரைமோர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யும் அலிஸ்டைர் ரின்ட் கூறினார்.

60ம் ஆண்டுகளில் ஒருமுறை தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்குப் போயிருந்தார் ஷெப்பர்ட். ஆனால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்குவேன் என்று அறிவித்தார் ஷெப்பர்ட். சொன்னதோடு நிற்காமல் அந்த இயத்திரத்தையும் கண்டுபிடித்தார். தானியங்கி சாக்லேட் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பணம் தரும் ATM இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து 2007ல் பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், எனது பணத்தையே என்னால் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தானியங்கி சாக்லேட் தரும் இயந்திரத்தைப் பார்த்தேன். அதை அடிப்படையாக வைத்து இந்த ATM இயந்திரத்தை உருவாக்கினேன் என்றார்.

ஷெப்பர்ட் கண்டுபிடித்த முதலாவது தானியங்கி பணம் தரும் இயந்திரம், வடக்கு லண்டன் புறநகர்ப் பகுதியில், பர்க்லேஸ் வங்கிகிளையில் 1967ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி நிறுவப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது ATM இயந்திரமாகும்.

அப்போது பிளாஸ்டிக் டெபிட் கார்ட் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ஷெப்பர்ட் கண்டுபிடித்த மெஷினில், வேதிப் பொருள் தடவப்பட்ட சிறப்பு கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இதை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆறு இலக்கம் கொண்ட அடையாள எண்களை உருவாக்கினார் ஷெப்பர்ட். ஆனால் ஆறு எண்ணாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவித்ததால் அதை நான்கு இலக்க எண்ணாக மாற்றினார் ஷெப்பர்ட்.

சமையலறையில் வைத்து இதுகுறித்து நான் எனது மனைவியுடன் விவாதித்தேன். அப்போது அவர், என்னால் நான்கு இலக்க எண்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றார். இதையடுத்தே நான்கு இலக்க எண்களை நான் உருவாக்கினேன் என்றார் ஷெப்பர்ட்.

தற்போது உலக அளவில் 10.7 லட்சம் ATM இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இதற்குப் பிள்ளையார் சுழி போட்ட ஷெப்பர்ட் தற்போது மரணமடைந்துள்ளார்.

ஷெப்பர்டுக்கு மனைவி, 3 மகன்கள், 6 பேரப்பிள்ளைகள் உள்ளனர் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/05/atm.html"

1 comment:

Nimal said...

நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி...