Thursday 16 June 2011

* இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை - உலக வங்கி


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக (GDP) இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016 ல் முறையே 8.5%, 9.5% மாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது.

எனினும் இது 2011, 2012, 2013 ல் முறையே 7.5%, 6.8%, 6.4% என எட்டு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியினையே இலங்கையால் பதிவு செய்ய முடியும் என உலகவங்கி கடந்த வாரம் வெளியிட்ட (Global Economic Prospects 2011) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உயர்வான பணவீக்கம், உயர்வான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்தளவான பொதுப் படுகடன்கள் போன்றவை தனியார் முதலீடுகளை வெளியேற்றுகின்றன. இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான வளர்ச்சி வீதம் சரிவடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பணவீக்கம் உயர்வாக உள்ளன. ஆனால் இவை வட்டி வீதங்களை உயர்த்தி பணவீக்க அழுத்தங்களை சமாளிக்கின்றன. எனினும் இத்தகைய தீர்மானத்தினை இலங்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இலங்கைப் பொருளாதாரம் பணவீக்க அழுத்தங்களிற்குள்ளேயே காணப்படுகின்றது.

இதன் விளைவாகவும் வரவு செலவுதிட்ட பற்றாக் குறைகள் உயர்வடைவதுடன் இதுவே கடந்த ஆண்டில் மாலைதீவு, இந்தியா, இலங்கை ஆகியவற்றில் முறையே 20.7%, 8.8%, 7.9% என ஒப்பீட்டளவில் இலங்கையில் குறைவாக காணப்பட்டாலும் வருந்தத்தக்க நிலையிலேயே இலங்கையும் உள்ளது என உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவினை தளமாக கொண்டியங்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கம், செயற்பாடு மற்றும் அறிக்கைகள் தொடர்பாக ஆசிய நாடுகள் அதிருப்தி அடைந்து இருப்பதோடு இவற்றுக்கு எதிராக பல விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:-உதயன் இணையம்
submit_url ="https://pangusanthai-srilanka.blogspot.com/2011/06/blog-post.html"